மின்சாரக் கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம் – பொதுஜன பெரமுன எச்சரிக்கை.!
அரசின் முறையற்ற நிர்வாகம் மற்றும் ஊழல்களால் ஏற்பட்ட நட்டத்தை மக்களிடம் சுமத்த அனுமதிக்க முடியாது என்றும், மின்சாரக் கட்டணத்தை உயர்த்த முயன்றால் அதற்கு எதிராக மக்களைத் திரட்டி போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்திருந்தபோதிலும், இலங்கையில் எரிபொருள் விலை முன்கூட்டியே உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
போர்ச் சூழலை காரணம் காட்டி 20 நாட்கள் வரை விலை மனு கோரப்படாததால், தனியார் நிறுவனங்களை விட ஒரு லீற்றர் எரிபொருளுக்கு 80 ரூபா அதிகமாக அரசு செலுத்தியுள்ளதாகவும், இதனால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய இலாபம் பறிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்ற ஊழலால் 150 மெகாவாட் மின்சார இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அந்த இழப்பை ஈடுகட்ட நாட்டிலுள்ள சுமார் 60 இலட்சம் வீடுகளில் தலா மூன்று மின்விளக்குகள் வீதம் மொத்தம் 1.8 கோடி விளக்குகளை ஒரு நாள் முழுவதும் அணைக்க வேண்டிய நிலை உருவாகும் என சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான ஊழல்களால் ஏற்படும் நட்டத்தை மக்களிடம் சுமத்தாமல், அதற்குப் பொறுப்பானவர்களிடமிருந்தே அரசு மீட்டெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.அரசின் நிர்வாகத் திறமையின்மையை மறைக்க மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முயற்சி எடுக்கப்பட்டால், அதற்கு எதிராக பாரிய மக்கள்போராட்டங்களை முன்னெடுக்கத் தயார் எனவும் டி.வி. சானக்க தெரிவித்தார்