பராட்டே சட்டம் உடனடியாக இடைநிறுத்தப்பட வேண்டும் – சஜித் பிரேமதாச வலியுறுத்தல்.!
பராட்டே சட்டத்தின் அமுலாக்கத்தை உடனடியாக இடைநிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.கொழும்பில் இன்று (25) நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோருடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட அவர், எரிபொருள் விலைகள் திடீரென அதிகரித்துள்ளதால் நாட்டின் பொருளாதாரத்தில் 52 சதவீதம் பங்களிப்பு வழங்கும் இத்துறை கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக குறிப்பிட்டார்.
இந்த விலை உயர்வு உற்பத்தி செயல்முறை, தேவை மற்றும் விநியோக சங்கிலி ஆகியவற்றில் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் 45 இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பையும் பல குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தையும் வழங்கி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.
இந்தத் துறை பாதிக்கப்பட்டால் நாட்டின்பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும் என எச்சரித்த அவர், தற்போதைய அரசாங்கம் உடனடியாக தலையிட்டு தேவையான ஆதரவு மற்றும் பாதுகாப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
2019 ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வீழ்ச்சி கண்டுள்ள இத்துறையை மீண்டும் எழச் செய்வதற்கான நடவடிக்கைகள் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக, பராட்டே சட்டத்தின் அமுலாக்கத்தை உடனடியாக இடைநிறுத்தி, தொழில்முனைவோரின் கடன்களை மறுசீரமைத்து அவர்கள் மீளச் செலுத்தக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.