யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்னால் வெடித்த போராட்டம்.!
விசாரணை என்னும் பெயரில் மாணவர்கள் மீதான தொடர்ச்சியான அச்சுறுத்தலுக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள், ஜனநாயக உரிமை கோரி விரிவுரைகளை புறக்கணித்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று(19) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி கறுப்பு கொடி ஏற்றிய விவகாரம் தொடர்பாக யாழ். பல்கலைக்கழக மூன்று மாணவர்கள் குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
இதனை கண்டித்து மாணவர்கள் விரிவுரைகளை புறக்கணித்து, இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அநுரவின் ஆட்சியிலும் இடம்பெறும் அடக்குமுறைகளை நிறுத்துமாறும், இனிமேல் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெறும் ஜனநாயக ரீதியான செயற்பாடுகளுக்கு அச்சுறுத்தல் வழங்க கூடாது என்றும், விசாரணைகளை பல்கலைக்கழக நிர்வாகத்தோடு நிறைவு செய்யுமாறும் கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
விசாரணைகளுக்காக மாணவர்கள் சென்றுள்ள நிலையில், அவர்கள் திரும்பி வரும்வரை தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக போராட்டத்தில் ஈடுபடுகின்ற மாணவர்கள் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வாயிலும் மாணவர்களால் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


