அல்லைப்பிட்டியில் பொலிஸாரால் சுட்டுக் கொ*ல்லப்பட்ட சிறுவனுக்கு நீதி வேண்டி போராட்டம்.!
கடந்த பெப்ரவரி மாதம் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான அ.அருள்பாயஸ் என்ற சிறுவனின் கொலைக்கு நீதி வேண்டி இன்று (10) ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையம் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மனித உரிமை ஆர்வலர் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில் சிறுவனின் உறவினர்கள் மற்றும் ஏனையோர் கலந்துகொண்டு, பதாகைகள் தாங்கியவாறு பொலிஸாருக்கு எதிராக கோசங்கள் எழுப்பியதுடன் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் ஊர்காவற்றுறை நீதிமன்றின் முன்பாக காலை 11 மணக்கு ஆரம்பமானது.
போராட்டம் ஆரம்பமான சில நிமிடங்களில் நீதிமன்ற பொலிஸாரால் நீதிமன்றுக்கு முன்பாக போராட்டம் நடத்த முடியாது எனக் கூறி நீதிமன்ற வளாகத்தை கடந்து போராட்டத்தை முன்னெடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது.
பொலிஸாரின் கோரிக்கையை ஏற்ற போராட்டக்காரர்கள் பின்பு ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையம் முன்பாக ஒன்றுகூடி போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது பொலிஸாரின் செயலைக் கண்டித்து பல்வேறு சுலோங்கள் எழுதப்பட்ட பதாகைகளை தாங்கி, கோசமிட்டு தமது எதிர்ப்பை காட்டிய போராட்டக்காரர்கள் குறித்த கொலைக்கு காரணமான பொலிஸாரை தண்டிக்க வேண்டும் என்றும் குறிப்பாக தனது மகனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியே சுட்டதாகவும் தாயார் குற்றம் சாட்டினர்.
அத்துடன் மிலேச்சத்தனமான கொலைகளை பொலிஸார் இனியொரு தடவை மேற்கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தியதுடன் நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
முன்பதாக கடந்த 10 ஆம் திகதி அதிகாலை 1.15 மணியளவில் வேலணை – அல்லைபிட்டிப் பகுதியில் உத்தரவை மீறி கடமையில் இருந்த பொலிஸாரை மோதிவிட்டு தப்பிச்செல்ல முற்றட்ட ஹயஸ் ரக வாகனம் மீதே தாம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதன் போதே குறித்த 17 வயது இளைஞன் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.




