இஸ்ரேல் – அமெரிக்காவுக்கு ஆதரவாக கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம்.!
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குத் தமது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், கொழும்பில் நேற்று (09) விசேட கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தலைமையிலான சிறிய குழுவொன்றினால், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்னால் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நாடுகளின் தேசியக் கொடிகளை ஏந்தியிருந்ததுடன், தற்போதைய போரில் அந்த நாடுகளின் நிலைப்பாட்டுக்கு ஆதரவான கோஷங்களையும் எழுப்பினர்.
இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பத்தரமுல்லே சீலரத்ன தேரர்,
“இலங்கையில் உள்நாட்டுப் போர் நிலவிய காலப்பகுதியில் இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரண்டு நாடுகளுமே எமக்கு ஆதரவு வழங்கின. அதனை நாம் மறக்கவில்லை. எனினும், தற்போதைய உலக அரசியல் சூழலில் நாம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் பக்கமே நிற்கின்றோம்.” – என்றார்.
மத்திய கிழக்கு பதற்றத்தைத் தொடர்ந்து, ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்களைக் கண்டித்து இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இவ்வாறானதொரு பின்னணியிலேயே, அதற்கு மாற்றமாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவித்து இந்தப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
இந்தத் திடீர் போராட்டத்தையடுத்து அமெரிக்கத் தூதரகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.