மின்சார சபை மறுசீரமைப்பு: அரசை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்.!
தேர்தலுக்கு முன்னர் தேசிய சொத்துக்களைப் பாதுகாப்பதாகக் கூறி அதிகாரத்தைப் பெற்ற தற்போதைய அரசு, இன்று இலங்கை மின்சார சபையைச் சிதைக்கின்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தேர்தலுக்கு முன்பு மின்சார சபையின் 23 ஆயிரம் தொழிலாளர்களை முன்னிறுத்தி, எந்த நிலையிலும் மின்சார சபையை தனியார்மயமாக்க விடமாட்டோம் என மக்கள் விடுதலை முன்னணி உறுதியளித்ததாகக் குறிப்பிட்டார். ஆனால் அதிகாரத்தைப் பெற்ற பின்னர் அந்த வாக்குறுதியை மறந்து, மின்சார சபையை பல பகுதிகளாகப் பிரிக்கும் திட்டத்தை அரசு முன்னெடுத்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மின்சக்தித் துறை நாட்டின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய முக்கிய துறையாக இருப்பதால், அதனுடன் தொடர்புடைய எந்த மறுசீரமைப்பும் பொறுப்புடனும்வெளிப்படைத்தன்மையுடனும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், அதிகாரத்தைப் பெற்ற ஆட்சியாளர்கள் தங்களை நம்பி வாக்களித்த 23 ஆயிரம் தொழிலாளர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மின்சார சபையில் சீர்திருத்தங்கள் தேவை என்பதில் எவ்வித முரண்பாடும் இல்லையெனவும், ஆனால் அந்தச் சீர்திருத்தங்கள் நிறுவனத்தையே பாதிக்கும் வகையில் அமையக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் தொடர்பிலும் அரசின் திட்டமிடல் குறைபாடுகளை அவர் சுட்டிக்காட்டி, இப்போது முழு மின்சார சபையும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.இந்த மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கவில்லை என்றும், இனிமேல்அரசின் வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் நாட்டின் மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.