விமல் வீரவன்சவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு.!
ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கை எதிர்வரும் மார்ச் 18ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேலதிக நீதவான் அஸங்க எஸ். போதரகம உத்தரவிட்டார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச உள்ளிட்ட அந்தக் கட்சியின் ஆறு உறுப்பினர்களுக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு சாட்சியாளர்களின் சாட்சியங்களை பதிவு செய்ய வேண்டியுள்ளது என கறுவாத்தோட்டம் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதவான், வழக்கின் மேலதிக விசாரணையை மார்ச் 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.வழக்கில் பிரதிவாதிகளாக உள்ள விமல் வீரவன்ச, ஜயந்த சமரவீர, வீரகுமார திஸாநாயக்க, பியசிறி விஜேநாயக்க மற்றும் மொஹமட் முஸம்மில் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகினர்.
இவ்வழக்கின் மற்றொரு சந்தேகநபரான ரொஜர் செனவிரத்ன சுகவீனம் காரணமாக நீதிமன்றில் முன்னிலையாக முடியவில்லை என அவரது சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வீதி மறிக்கப்பட்டமை தொடர்பிலேயே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.