பிள்ளையானின் அடிப்படை உரிமைகள் மனு 18 ஆம் திகதி விசாரணைக்கு!
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என அழைக்கப்படும் பிள்ளையானின் அடிப்படை உரிமை மனுவை இம்மாதம் 18ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எந்தவொரு நியாயமான காரணமுமின்றி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, அதற்கு எதிராக சிவநேசதுரை சந்திரகாந்தன் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று (09) உயர் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டபோது, முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்தில் கொண்ட மூவர் கொண்ட நீதியரசர்கள் அமர்வு, மனுவை விசாரணைக்காக இம்மாதம் 18ஆம் திகதி அழைக்க உத்தரவிட்டது.இந்த மனுவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்ட மா அதிபர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மை கைது செய்து தடுப்புக் காவலில் வைப்பது சட்டத்திற்கு புறம்பானது என்றும், இதன் மூலம் தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.