கிலன்டில் தோட்டத்தில் மரக்கிளைகள் முறிந்து வீழ்ச்சி: போக்குவரத்து தற்காலிகமாக பாதிப்பு.!
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிலன்டில் தோட்டத்தின் கோர்த்தி பகுதியில் இன்று (9) மதியம் சுமார் 2.00 மணியளவில் பலத்த காற்று வீசியதனால் பெரிய வாகை மரத்தின் கிளைகள் முறிந்து விழுந்தன.இதன் காரணமாக ஹட்டன் – மஸ்கெலியா பிரதான சாலையில் போக்குவரத்து சுமார் ஒரு மணிநேரம் தடைபட்டது. மரக்கிளைகள் முறிந்து விழுந்ததினால் தொலைதொடர்பு மற்றும் மின்கம்பிகளும் அறுந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் இடம்பெற்ற பகுதியில் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகள் அமைந்துள்ளதுடன், மரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களும் காணப்படுகின்றன. தெய்வாதீனமாக, கிளைகள் விழுந்த இடத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் தொழிலாளர்கள் தேயிலை கொழுந்து பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததால் எவ்வித உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை.
மரத்தின் கீழ் பகுதியில் அதிக அளவில் தேயிலைச் செடிகள் காணப்படுகின்றன. காலை வேளையில் அந்தப் பகுதியில் கொழுந்து பறிக்கும் பணி முடிக்கப்பட்டிருந்த நிலையில், மதிய வேளையில் பெண் தொழிலாளர்கள் சுமார் 100 மீட்டர் தொலைவில் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பின்னர் முறிந்து விழுந்த மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டதைத் தொடர்ந்து ஹட்டன் – மஸ்கெலியா பிரதான சாலையில் போக்குவரத்து மீண்டும் வழமையான நிலைக்கு திரும்பியது.