மாகாண சபைத் தேர்தல் முறைமை தீர்மானிக்க நாடாளுமன்ற விசேட செயற்குழு – தேர்தல்கள் ஆணைக்குழு வரவேற்பு.!
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான தேர்தல் முறைமையை தீர்மானிக்க நாடாளுமன்றத்தில் விசேட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதை வரவேற்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் விஜித் ஹேரத் தலைமையில் 12 உறுப்பினர்களைக் கொண்ட இந்த செயற்குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது: மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையில் நடத்துவது என்பது குறித்து ஆராய்ந்து பரிந்துரைகள் வழங்க இந்த செயற்குழுவுக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள், அதாவது மே மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். அந்த அறிக்கைஅந்த அறிக்கை கிடைத்தவுடன், சட்ட ரீதியான அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தலை நடத்த தேவையான ஆரம்ப நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்படும்.
1988ஆம் ஆண்டின் மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு, 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க சட்டத்தின் மூலம் கலப்பு தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. எல்லை நிர்ணய பணிகள் நிறைவடையாத காரணத்தால் தேர்தல் நடத்துவதில் இழுபறி நிலவுகிறது. இதனால் மக்கள் பிரதிநிதிகள் இன்றி மாகாண சபைகள் இயங்கி வருகின்றன.எல்லை நிர்ணயப் பணிகள் முடியும் வரை பழைய விகிதாசார முறைமையில் தேர்தலை நடத்தலாம் என்ற யோசனைகள் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளன.
பழைய முறையா அல்லது புதிய முறையா என்ற குழப்பத்திற்கு நாடாளுமன்றமே தீர்வு காண வேண்டும் என உயர் நீதிமன்றமும் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது.இந்த விசேட செயற்குழுவில் தேர்தல்கள் ஆணைக்குழுவும் தனது ஆக்கபூர்வமான யோசனைகளை முன்வைக்க உள்ளதாகவும், மாகாண சபைகளுக்கு மக்கள் பிரதிநிதிகளை விரைவில் நியமிக்க வேண்டும் என்பதில் ஆணைக்குழு உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அரசு எடுக்கும் சாதகமான தீர்மானங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.