யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகளை நிறுத்துமாறு உத்தரவு.!
யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் விளையாட்டு வளாகத்தின் அனைத்து நிர்மாணப் பணிகளையும், சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படும் வரை உடனடியாக நிறுத்துமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை உத்தரவிட்டுள்ளது.இந்தத் திட்டம் தொடர்பான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறையின் ஒரு பகுதியாக, ‘திட்ட வரைபு அறிக்கை’ ஒன்று ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மைதானத்திற்காக ஒதுக்கப்பட்ட 48 ஏக்கர் காணி பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிக்குள் வரவில்லை என்பதை வனப் பாதுகாப்புத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், முழுமையான சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கை சமர்ப்பித்து அனுமதி பெறப்படும் வரை பணிகளைத் தொடர முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்குமுன் அப்பகுதியில் நிலம் சமப்படுத்தும் பணிகள் இடம்பெற்றதாக கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து, யாழ்ப்பாண அலுவலக அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்
.
1980ஆம் ஆண்டின் 47ஆம் இலக்க தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின் கீழ், அனுமதி இன்றி இத்தகைய திட்டங்களை முன்னெடுப்பது சட்டவிரோதமாகும். இதன்படி, கடந்த பெப்ரவரி 18ஆம் திகதி பணிகளை நிறுத்துமாறு ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு உத்தியோகபூர்வ அறிவிப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், இலங்கை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கம் இந்தத் திட்டம் கட்டாய சுற்றுச்சூழல் அனுமதியின்றி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அதனை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.