பட்டதாரி ஆசிரியர்கள் பிரதமர் அலுவலகம் முன் கவனயீர்ப்பு போராட்டம் – நியமன தாமதம் குறித்து கண்டனம்.!
கொழும்பு மலர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை முதல் மேல் மற்றும் தென் மாகாண பட்டதாரி ஆசிரியர்கள் இணைந்து பாரிய கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
2023ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மேல் மாகாண ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் தேர்ச்சி பெற்று, தேவையான அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்த போதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமக்குரிய நியமனங்கள் வழங்கப்படாமல் தாமதப்படுத்தப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்த பதாதைகளில், தமக்குரிய வெற்றிடங்களை மறைத்து புதிய வர்த்தமானி அறிவிப்புகள் மூலம் அந்த இடங்களை நிரப்ப அதிகாரிகள் முயற்சிப்பதாகவும்,இதனால் தங்கள் சட்டபூர்வ உரிமைகள் பாதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. தமக்கு உரிய உரிமைகளை மறுப்பதற்காக அதிகாரிகள் திட்டமிட்ட முறையில் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்துகிறார்களா? என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பினர்.
“எங்களுக்கு கௌரவமான அரச சேவை வேண்டும், அரசியல் பழிவாங்கல்கள் வேண்டாம்” என முழக்கமிட்ட அவர்கள், தகுதியுள்ள பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க தயக்கம் ஏன் என கேள்வி எழுப்பினர்.மேலும், தென் மாகாணத்தில் காணப்படுவதாகக் கூறப்படும் 704 ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பிலும் அவர்கள் கவனம் ஈர்த்ததுடன், நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினர்.
இந்த விவகாரத்தில் ஜனாதிபதி தலையிட்டு தமக்கு நீதி வழங்க வேண்டும் என்றும்,வெற்றிடங்களுக்கு உடனடியாக நியமனங்கள் வழங்க மாகாண சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடரப்போவதாக தெரிவித்த பட்டதாரிகள், தகுதியுள்ளவர்களுக்கு நியமனம் வழங்குவது அரசின் பொறுப்பு எனவும் நினைவூட்டினர்.
இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட சில முக்கிய பிரதிநிதிகள், பிரதமர் அலுவலக உயரதிகாரிகளுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.