தீவிரமடையும் எல் நினோ காலநிலை மாற்றம் தொடர்பில் எச்சரிக்கை.!
பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள அசாதாரண வெப்ப மாற்றம் காரணமாக எல் நினோ காலநிலை முறை தீவிரமடைந்து வருவதாகவும், இதன் காரணமாக அடுத்த சில மாதங்களில் உலகெங்கிலும் கடுமையான வெப்பம், வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற வானிலை மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்றும் உலக வானிலை அமைப்பு (WMO) எச்சரித்துள்ளது.
இந்த நிகழ்வானது 2026 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் உச்சத்தை அடைந்து ‘மிகவும் வலுவானதாக’ மாறும் என எதிர்பார்க்கப்படுவதுடன், 2027 பெப்ரவரி வரை தொடர்வதற்கான வாய்ப்பு 100 சதவீதத்தை எட்டியுள்ளதாக கணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வெப்பமண்டல பசுபிக் பகுதியின் மேற்பரப்புக்குக் கீழே அசாதாரணமாக வெப்பமான நீரின் பாரிய இருப்பு காணப்படுகின்றது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மேற்பரப்புக்குக் கீழே உள்ள நீரின் வெப்பநிலை இயல்பை விட 8°C (14°F) வரை அதிகமாகப் பதிவாகியுள்ளது.
“பூமி தற்போது அறிமுகமில்லாத காலநிலை மாற்றத்திற்குள் நுழைந்துள்ளது, கடல் நீரும் தொடர்ந்து வெப்பமடைந்து வருகிறது” என ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுவாக 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை உருவாகும் இந்த இயற்கையான காலநிலை மாற்றம், இம்முறை பெருங்கடல்கள் ஏற்கனவே அதிக வெப்பத்துடன் காணப்படுவதனால் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. மே முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் பசிபிக் கடலின் வெப்பநிலை இயல்பை விட 2.6°C வரை உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக உலகளவில் விவசாயம், பொதுச் சுகாதாரம், நீர் விநியோகம் மற்றும் எரிசக்தித் துறைகள் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. வறட்சி மற்றும் திடீர் வெள்ளப் பெருக்குகள் மூலம் சமூகங்கள் மற்றும் பொருளாதாரத்திற்குப் பெரியளவிலான பாதிப்புகள் ஏற்படக் கூடுமென WMO தலைவர் செலஸ்டே சவுலோ தெரிவித்துள்ளார்.
இவ்வானிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கில் தேசிய வானிலை முகமைகள் மற்றும் அரசுகள் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.
இதேவேளை, நிலவும் காலநிலை மாற்றம் மற்றும் தீவிரமடைந்து வரும் வெப்பநிலை தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டுமென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.