நல்லூர் தேர்த் திருவிழாவில் தங்க நகைகள் திருட்டு; பெண் ஒருவர் கைது.!
நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த் திருவிழாவின் போது தாலிக்கொடி அறுத்த குற்றச்சாட்டில் கைதான கொழும்பை சேர்ந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த பெண்ணொருவரின் தாலிக்கொடி அறுக்கப்பட்டமை தொடர்பில், ஆலய சூழலில் கடமையில் இருந்த பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டமையை அடுத்து துரிதமாக செயற்பட்ட பொலிஸார் ஆலய சூழலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவின் உதவியுடன் தாலிக்கொடி அறுத்த பெண்ணை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், பெண்ணிடம் இருந்து அறுக்கப்பட்ட தாலிக்கொடி மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து குறித்த பெண்ணை யாழ்.நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்திய நிலையில், அப்பெண்ணை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேவேளை நல்லூர் ஆலய தேர் மற்றும் தீர்த்த திருவிழாவின் போது, சுமார் 45 பவுண் தங்க நகைகள் களவாடப்பட்டுள்ள நிலையில், ஆலய சூழலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், சில சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.