இந்தியாவில் மீட்கப்பட்ட ஒராங்குட்டான்கள் : இந்தோனேசியாவுடன் கூட்டு விசாரணை
இந்தியாவில் மீட்கப்பட்ட ஐந்து ஒராங்குட்டான் குட்டிகளை அவற்றின் சொந்த நாடான இந்தோனேசியாவுக்கு மீள அனுப்புவது தொடர்பாக இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்தோனேசிய அரசு முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இந்த குட்டி ஒராங்குட்டான்கள் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவைச் சேர்ந்தவை என நம்பப்படும் நிலையில், அவை சர்வதேச வனவிலங்கு கடத்தல் கும்பலால் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசூர் மாவட்டத்தில் மீட்கப்பட்ட இந்த ஐந்து ஒராங்குட்டான் குட்டிகளும் தற்போது புவனேஸ்வரத்தில் உள்ள நந்தன்கானன் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை ஒடிசா அரசு முன்னெடுத்து வருவதுடன், விலங்குகள் இந்தியாவுக்குள் எவ்வாறு கொண்டு வரப்பட்டன என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக, அவை கடத்தப்பட்டிருக்கக்கூடிய வழித்தடத்தை கண்டறியும் நோக்கில் கடலோரக் காவல்படை, வானூர்தி நிலைய அதிகாரிகள் மற்றும் தொடருந்து துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை இணைத்து கூட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், இந்த ஒராங்குட்டான் குட்டிகளின் தாயகம் மற்றும் அவற்றுக்கிடையிலான மரபணு தொடர்புகளை உறுதிப்படுத்த மரபணு பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளின் அதிகாரிகளும் தூதரக மட்டத்திலும் தொடர்புகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத வனவிலங்கு கடத்தலின் பின்னணி குறித்து விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஒராங்குட்டான் குட்டிகளை அவற்றின் இயற்கையான தாயகத்துக்கு பாதுகாப்பாக மீள அனுப்புவதற்கான நடவடிக்கைகள் குறித்து இரு நாடுகளும் ஆலோசித்து வருகின்றன.
எனினும், இந்த ஒராங்குட்டான் குட்டிகள் எவ்வாறு இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டன, அவற்றை கடத்தியவர்கள் யார் என்பது தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.