220 இலட்சம் மக்களின் உரிமைகளைப் பறித்துள்ளது அநுரவின் அரசு! : சஜித் குற்றச்சாட்டு!!
“நமது நாட்டின் 9 மாகாணங்களிலும் தற்போதைய அரசு பொய்களைக் கூறிக்கொண்டு பொய்ப் பிரசாரப் பயணத்தில் ஈடுபட்டு வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளை நான் சந்தித்தபோது அந்தப் பகுதிகளின் பல்வேறு பிரச்சினைகள் வெளிச்சத்துக்கு வந்தன. இந்த அரசு இரண்டு ஆண்டுகளாக விழித்திருந்து பொழுதைப் போக்கியதே தவிர நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை.
இதனால் கடந்த 2 ஆண்டுகள் என்பது வடக்கு, கிழக்கு மற்றும் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் உரிமைகளைப் பறித்த 2 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில் பொய்ப் பிரச்சாரப் பயணம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.” என்றும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் அவர் மேலும் உரையாற்றுகையில்,
“எம்.பி. தாஹிர் சுட்டிக்காட்டியபடி, மருதமடு, நிந்தவூர், கல்முனை, சாய்ந்தமருது, நாவின்தன்வெளி, சம்மாந்துறை ஆகிய பகுதிகளில் கல்வி சீர்குலைந்துள்ளது. பாடசாலைகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் கூட இல்லை.
எம்.பி. கோடீஸ்வரன் சுட்டிக்காட்டியபடி ஒலுவில் துறைமுகம், திருக்கோவில், கதிரவெளி ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு கடல் அரிப்பு ஏற்படுகின்றது. இதற்கெல்லாம் அரசிடம் எந்தத் தீர்வும் இல்லை.
வைத்தியர் ஸ்ரீநாத் எம்.பி. சுட்டிக்காட்டுவது போல், மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை குறித்து நீண்டகாலமாக மாவட்டக் குழுக்கள் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அரசிடமிருந்து பதில் இல்லை. திருக்கோவில் வைத்தியசாலை, பனங்காடு வைத்தியசாலை, நாவிதன்தன்வெளி வைத்தியசாலை ஆகியவற்றில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மனித வளப் பற்றாக்குறை நிலவுகின்றன. இதற்கும் அரசிடம் தீர்வு இல்லை.
வைத்தியர் ஸ்ரீநாத் எம்.பி. மேலும் சுட்டிக்காட்டியபடி, கித்துல்உறுகாமம் நீர்த்தேக்கத் திட்டத்தின் மூலம் 26 ஆயிரம் ஏக்கர் நிலத்தை செயற்கை நீர்ப்பாசனம் மூலம் விவசாய நிலமாக மாற்ற முடியும். இந்தத் திட்டத்துக்கு வெளிநாட்டு உதவிகளை வழங்கத் தயாராக இருந்த போதிலும் இந்தத் திட்டம் இன்னும் தொடங்கப்படவில்லை.
ஜி. ஸ்ரீநேசன் எம்.பி. சுட்டிக்காட்டியபடி, வாழைச்சேனை காகித ஆலையில் 4 ஆயிரம் பேர் பணியாற்றிய நிலையில் தற்போது 250 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர். தேர்தல் காலத்தில் இவற்றை அபிவிருத்தி செய்வதாக அளித்த வாக்குறுதிகளை இன்று அரசு மீறியுள்ளது.
கனிம மணல் அகழ்வு போன்றவற்றைத் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் கடல் அரிப்புக்குள்ளாகும் கடலோரப் பகுதிகளில் சட்டவிரோதக் கனிம மணல் அகழ்வு நடைபெறுகின்றது. இது தவிர நிலங்கள் பலவந்தமாகப் பறிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்ற அரசு, செய்வதாகக் கூறியவற்றை உடனடியாகச் செயற்படுத்த வேண்டும்.
வைத்தியர் பி. சத்தியலிங்கம் எம்.பி. சுட்டிக்காட்டியபடி, மல்வத்து ஓயா திட்டத்தைச் செயற்படுத்துவதன் மூலம் கிடைக்கப் பெறும் பலன்கள் சரியான பயனாளிகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். நிலங்களை வழங்குதல், இழப்பீடு வழங்குதல் போன்றவற்றுடன் நிவாரணம் பெற வேண்டியவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் ஒரு முறைமையைச் செயற்படுத்துமாறும் கோருகின்றேன்.
மேலும், நாட்டின் நுகர்வோர் சமூகத்தின் நலனுக்காக நளின் பண்டார எம்.பி. முன்வைத்த “பெற்றோலியம்,எரிபொருள் மற்றும் நீர் ஆகியவற்றுடன் தொடர்புடைய கைத்தொழில்களை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஒழுங்குபடுத்தலின் கீழ் கொண்டு வருதல்” என்ற பிரேரணையை நான் உறுதிப்படுத்துகின்றேன். மக்கள் சார்பாக இத்தகைய பிரேரணையை எதிர்க்கட்சி உறுப்பினர்தான் முன்மொழிய வேண்டுமா என்ற கேள்வி எழுகின்றது. இனியாவது அரசு மக்களைப் பற்றிச் சிந்தித்து இத்தகைய பிரேரணைகளைக் கொண்டு வர வேண்டும்.” – என்றார்.