மன்னாரின் கனிமம் மற்றும் காணி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விசேட கலந்துரையாடல்!
மன்னார் மாவட்டத்தில் நீண்ட காலமாக நிலவி வரும் கனிம வளங்கள் மற்றும் வனப்பகுதிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், இன்று வெள்ளிக்கிழமை (11) மதியம் மன்னார் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் அவர்களின் ஒருங்கிணைப்பில்,பிரதி அமைச்சரும் மன்னார் அபிவிருத்திக் குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் வனவளத் திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
குறிப்பாக, மன்னார் மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள 48 மணல் அகழ்வு அனுமதி பத்திரங்கள், மல்வத்து ஓயா சார்ந்த பகுதிகளில் இடம்பெற்ற மணல் அகழ்வு, பிரதேச செயலகங்களுக்கும் வனப் பாதுகாப்புத் திணைக் களத்திற்கும் இடையிலான அதிகார வரம்புகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
மேலும், மணல், மற்றும் கல் அகழ்வுக்கு அனுமதிகளை முறையானதும் விஞ்ஞானபூர்வமான துமான நடைமுறையின் கீழ் வழங்குவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
அதேவேளை, அண்மையில் மன்னார் மாவட்டத்தின் கிராமிய வீதிகளை புனரமைப்பதற்கான பயன்படுத்தப்பட்ட 1,302 கன மீற்றர் மணலுக்கு வரி அறவிடுவது தொடர்பான பிரச்சினை, வெள்ளாங்குளம் பகுதியில் காணப்படும் 3,000 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் கூட்டத்தில் ஆராயப்பட்டன.
இந்தப் பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வை பெற்றுக் கொள்ளும் வகையில், எதிர்காலத்தில் அமைச்சரவை மற்றும் ஜனாதிபதி மட்டத்தில் கொள்கை ரீதியான கலந்துரையாடல்களை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப் பட்டுள்ளதாக அபிவிருத்திக் குழுத் தலைவர் உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார்.







