அரசுக்கு எதிராக நாளை மாபெரும் உணவு தவிர்ப்பு போராட்டம்.!
தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தமிழ் மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் கூட இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள சாவகச்சேரி நகர சபை முன்னாள் உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிஷோர், சாவகச்சேரி பிரதேச சபையின் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் உறுப்பினர் மயூரன் ஆகியோர், நாளை சனிக்கிழமை சாவகச்சேரியில் மாபெரும் உணவு தவிர்ப்பு போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.
சமகால விவகாரங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
நாளை சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை சாவகச்சேரி பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டம் குறித்து அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,
“செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 500 இற்கும் அதிகமான எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றுக்குச் சர்வதேச விசாரணை கோருதல், காணாமல் ஆக்கப்பட்ட மக்களுக்கான சர்வதேச விசாரணையை வலியுறுத்துதல் மற்றும் நீண்டகாலமாக சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் ஆகிய முக்கிய கோரிக்கைகள் இந்தப் போராட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளன.
உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகத்துக்குள் ‘பிரஜா சக்தி’ அமைப்பை உருவாக்கித் தலையீடு செய்வதற்கு எதிராகவும், ஆளுநரால் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் மற்றும் தவிசாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் மற்றும் எதேச்சதிகார அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அத்துடன், மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துதல் மற்றும் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவித்தல் போன்ற கோரிக்கைகளும் வலியுறுத்தப்படவுள்ளன.
இந்தப் போராட்டத்துக்கு அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகள், தமிழ்த் தேசியம் சார்ந்து இயங்கும் பொதுமக்கள், பொது அமைப்புகள், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சாவகச்சேரி, கொடிகாமம் மற்றும் கைதடி வணிகர் கழகங்கள், சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் முச்சக்கரவண்டி சங்கங்கள் மற்றும் தென்மராட்சி சிற்றூர்திச் சங்கம் உள்ளிட்ட பல தரப்பினரும் தங்களது பாரிய ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கியுள்ளனர்.
எனவே, அரசின் தற்போதைய செயற்பாடுகளுக்கு எதிராகத் தமது உணர்வுபூர்வமான எதிர்ப்பை வெளிப்படுத்தவும், உரிமைகளை வென்றெடுக்கவும் நாளை நடைபெறவுள்ள உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் அனைத்து மக்களையும் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை அணிதிரளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றனர்.
