உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
10 வியாழன்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் தாமதம் : தெரிவுக்குழுக் கூட்டத்தைப் புறக்கணித்த எதிரணி

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
90 பார்வைகள்

மாகாண சபைத் தேர்தல் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் 10ஆவது கூட்டத்தை நான்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று புறக்கணித்தனர்.

நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான தீவிரத்தையும் அவசரத்தையும் தெரிவுக்குழு வெளிப்படுத்தத் தவறி வருவதால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் நிஷாம் காரியப்பர் ஆகிய நான்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் தமது கடுமையான கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

இன்றைய கூட்டத்தில், நான்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சார்பில் சாணக்கியன் இராசமாணிக்கம் எம்.பி., பத்து கூட்டங்கள் நடைபெற்றுள்ள போதிலும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான அர்த்தமுள்ள முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதால், இத்தகைய செயன்முறைக்கு இனியும் ஆதரவளிக்க முடியாது எனத் தெரிவுக்குழுவிடம் தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான நடைமுறைத் தீர்வுகள் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான தெளிவான முன்மொழிவொன்றை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே முன்வைத்துள்ளது. அதில் பெண்களுக்கு 25 சதவீத உத்தரவாத பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கான ஏற்பாடும் உள்ளடங்கியுள்ளது.

அதேவேளை, மற்றுமொரு சட்ட ரீதியான வழிமுறையும் நாடாளுமன்றத்தின் முன் உள்ளது. சாணக்கியன் இராசமாணிக்கம் எம்.பியால் முன்வைக்கப்பட்ட தனியார் உறுப்பினர் சட்டமூலம் ஏற்கனவே நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் இடம்பெற்றுள்ளது.

பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணங்கினால், அந்தச் சட்டமூலத்தை முன்னெடுத்து மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான சட்ட ரீதியான ஏற்பாடுகளை உருவாக்க முடியும்.

எனவே, தேர்தலை நடத்துவதற்கான நடைமுறை மற்றும் சட்டரீதியான தெரிவுகள் ஏற்கனவே நாடாளுமன்றத்தின் முன் உள்ளன. இனிமேல் தேவையானது மேலும் செயன்முறைகளை நீடிப்பதல்ல. அரசியல் தீர்மானத்தை மேற்கொண்டு தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதே ஆகும்.

தேசிய மக்கள் சக்தி தனது 2024 ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில், ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்துக்குள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதாகத் தெளிவாக உறுதியளித்திருந்தது. இந்த உறுதிமொழி விஞ்ஞாபனத்தின் 128ஆவது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாகாண சபைகள் பல ஆண்டுகளாக மக்கள் பிரதிநிதிகளின்றி இயங்கி வருகின்றன. இதன் மூலம் தமது பிரதிநிதிகளை ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யும் மக்களின் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை மேலும் தொடர அனுமதிக்க முடியாது.

எனவே, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான தெளிவான காலவரையறையுடன் கூடிய நடவடிக்கைகளை அரசும் தெரிவுக்குழுவும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என நாம் வலியுறுத்துகின்றோம்.

தெரிவுக்குழு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான தீவிரமான அரசியல் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தத் தவறினால், நான்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் மிகவும் தீவிரமானதொரு தீர்மானத்தை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள். அந்தத் தீர்மானம் என்னவென்பதை இவ்வேளையில் வெளிப்படுத்த விரும்பவில்லை என்று சாணக்கியன் இராசமாணிக்கம் எம்.பி. மேலும் கூறினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்துடன் சிலோன் மீடியா போரம் உயர்மட்டக் கலந்துரையாடல்

“இலங்கை ஊடகவியலாளர் நம்பிக்கை நிதியம்” (Sri Lanka Journalists’ Trust Fund) ஸ்தாபிப்பது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் இன்று (10) வியாழக்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ…

106 0 0
இலங்கை செய்திகள்

சிங்காரவத்தை தோட்டப் பகுதியில் சிறுத்தை புலியின் அச்சுறுத்தல்!

பொகவந்தலாவ சிங்காரவத்த தோட்டம் பகுதியில் பாடசாலைக்கு அருகாமையில் உள்ள தேயிலை மலையில் 09.09.2026.புதன்கிழமை காலை சிறுத்தை புலி ஒன்று இனங்கானப்பட்டுள்ளது இதன் காரணமாக குறித்த பகுதியில் தொழிலுக்கு…

98 0 0
இலங்கை செய்திகள்

இந்து மதகுருமார்கள் குழுவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

கடந்த இரண்டு வருடங்களாக நாட்டில் எந்தவொரு இனவாத மோதலுக்கும் இடமளிக்காது, அனைத்து மக்களுக்கும் இடையில் சகவாழ்வு, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்த…

99 0 0
இலங்கை செய்திகள்

தேங்காய்களை ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து கோர விபத்து!

குருநாகல் – கண்டி வீதியில், கலகெதர பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள சரிவுப் பகுதியில் உரித்த தேங்காய்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று இன்று காலை கட்டுப்பாட்டை இழந்த…

123 0 0