60 குழந்தைகள் உட்பட 100 பாலஸ்தீனர்களின் எச்சங்களுக்கு இறுதிச்சடங்கு!
வடக்கு காஸாவின் ஜைதுன் பகுதியில் இஸ்ரேலியத் தாக்குதல்களால் இடிந்து வீழ்ந்த கட்டிடங்களின் இடிபாடுகளுக்குள்ளிருந்து மீட்கப்பட்ட 60 சிறுவர்கள் உட்பட சுமார் 100 பாலஸ்தீனர்களின் எச்சங்களுக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டுள்ளன.
காசா நகரின் அல்-மஃமதானி மயானத்தில் நடைபெற்ற இந்த இறுதிச்சடங்கில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அல்லது என்புக்கூடுகளின் பாகங்கள் கஃபன் துணியால் சுற்றப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன.
மீட்கப்பட்ட எச்சங்களில் பெரும்பான்மையானவை ‘மாலகா’ எனும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை ஆகும்.
இந்தக்குடும்பத்தில் மட்டும் 55 பேர் உயிரிழந்துள்ளனர்.
பல வாரங்களாக நடைபெற்ற அகழ்வுக்கு பின்னரே இந்த எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதில் சில எச்சங்கள் 2023 நவம்பரில் நடைபெற்ற தாக்குதல்களுடையவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் காஸாவில் இன்னும் சுமார் 8000 உடல்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கனரக இயந்திரங்கள் மற்றும் பாதுகாப்புக் கருவிகளின் பற்றாக்குறை காரணமாகவே உடல்களை மீட்கும் பணி பல மாதங்களாக நீடித்து வருகிறது.