அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றக் கோரிக்கை
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தை தற்போதைய இடத்திலிருந்து வேறு பொருத்தமான இடத்திற்கு மாற்றி, புதிய நிரந்தரக் கட்டடமொன்றை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் ஏ.எல்.எம். அதாவுல்லா வலியுறுத்தியுள்ளார்.
அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (01) நடைபெற்றபோதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த மாநகர முதல்வர், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திற்கான நிரந்தரக் கட்டடம் வேறொரு பொருத்தமான காணியில் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
தற்போது பொலிஸ் நிலையம் இயங்கி வரும் காணி அக்கரைப்பற்று மாநகர சபைக்குச் சொந்தமானது எனவும், குறித்த காணி ஆரம்பத்தில் வாடகை அடிப்படையிலேயே வழங்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அக்கரைப்பற்று நகரின் எதிர்கால அபிவிருத்திப் பணிகள் மற்றும் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளை கருத்திற்கொண்டு அரச காணிகள் மற்றும் வளங்கள் முறையாகப் பயன்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
எனவே, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் கட்டடப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மற்றும் துறைசார் தரப்பினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மாநகர முதல்வர் ஏ.எல்.எம். அதாவுல்லா காரசாரமாக கருத்து வெளியிட்ட காணொளிக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, தற்போது அதிகளவில் கவனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.