அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாஉல்லாவின் விளக்கமறியல் நீடிப்பு!
பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் மேயர் அகமது செய்யது சக்கி அதாஉல்லாவை எதிர்வரும் செப்டம்பர் 09ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர் கடந்த ஆகஸ்ட் 19ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை செப்டம்பர் 01ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், சுகயீனம் காரணமாக சக்கி அதாஉல்லா மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதால், அவர் இன்று நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர்படுத்தப்படவில்லை.
சிறைச்சாலை அதிகாரிகளின் அறிக்கைகளைப் பரிசீலித்த நீதிவான், சந்தேகநபரை எதிர்வரும் செப்டம்பர் 09ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
அக்கரைப்பற்று மாநகரசபையின் மேயராக சக்கி அதாஉல்லா பதவி வகித்த காலப்பகுதியில், அங்கு கடமையாற்றிய பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த பெண் அரச உத்தியோகத்தர் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, அவரை பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் சமூக வலைத்தளமான பேஸ்புக் நேரலையின் ஊடாக குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது, வாக்குமூலம் வழங்குவதற்காக பொலிஸ் நிலையத்திற்கு சென்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினரால் கடந்த ஆகஸ்ட் 18ஆம் திகதி அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது சந்தேகநபரை ஆகஸ்ட் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்னர் ஆகஸ்ட் 19ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, விளக்கமறியல் செப்டம்பர் 01ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது மூன்றாவது முறையாக சந்தேகநபரின் விளக்கமறியல் செப்டம்பர் 09ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.