மாணவர்களிடம் பா*லியல் சேட்டை; பொதுச் சுகாதார பரிசோதகருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!
கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 51 வயதுடைய பொதுச்சுகாதார பரிசோதகர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான அதிகாரி வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்று (31) கல்முனைத் தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்தபோதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிவான் கே.எல்.எம். சாஜித் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது இரு தரப்பு வாதப்பிரதிவாதங்களையும் செவிமடுத்த நீதிவான், சந்தேகநபரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 03 ஆம் திகதி வரை 3 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளையிட்டார்.
குறித்த பாடசாலையில் கடந்த 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாணவர்களுக்கான வழக்கமான சுகாதாரப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, பரிசோதனையில் ஈடுபட்ட அதிகாரி தமக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தமது பெற்றோரிடம் முறையிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பெற்றோர் ஒன்றிணைந்து கையொப்பமிட்ட முறைப்பாட்டுக் கடிதத்தைப் பாடசாலை அதிபர் ஊடாகக் கல்முனைத் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்திருந்தனர்.
அம்மாணவர்களின் முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணைகளையடுத்தே இந்த அதிரடிக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.