நிதி மோசடி – கேகாலை நகர சபை உறுப்பினர் விளக்கமறியலில்!
கபானா திட்டமொன்றை முன்னெடுப்பதாகக் கூறி 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கேகாலை மாநகர சபை உறுப்பினர் ஒருவரை எதிர்வரும் செப்டெம்பர் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
34 வயதான குறித்த சந்தேகநபர், தேசிய மக்கள் சக்தியின் கீழ் கேகாலை மாநகர சபையின் ஓலகம பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று காலை சுமார் 10.25 மணியளவில் கேகாலை–யட்டோகொட பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர், சந்தேகநபர் நேற்று பிற்பகல் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது வழக்கை செப்டெம்பர் 9ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான் நாலக வீரசிங்க, சந்தேகநபரை அன்றுவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
கண்டியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கேகாலை–தீவெல வீதியில் மினுவாங்கமுவ பகுதியில் அமைந்துள்ள காணியில் கபானா திட்டமொன்றை அபிவிருத்தி செய்வதாகக் கூறி குறித்த நகர சபை உறுப்பினர் தம்மிடமிருந்து 26 மில்லியன் ரூபா பணத்தைப் பெற்றதாக வர்த்தகர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
எனினும், குறித்த திட்டம் ஒருபோதும் நிர்மாணிக்கப்படவில்லை எனவும், அதற்காகப் பெறப்பட்ட பணம் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் வர்த்தகர் முதலில் கேகாலை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். இதனையடுத்து கேகாலை பொலிஸார் ‘பி’ அறிக்கையொன்றின் மூலம் கேகாலை நீதவான் நீதிமன்றத்திற்கு வழக்கை அறிக்கையிட்டனர்.
பின்னர், விசாரணைகள் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டதுடன், அந்தப் பிரிவினரும் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ‘பி’ அறிக்கையொன்றை சமர்ப்பித்தனர்.
விசாரணைகளின்போது சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களைப் பரிசீலித்த நீதிமன்றம், சந்தேகநபரை செப்டெம்பர் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.