இந்திய நிறுவனத்திற்கு காணி வழங்குவதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு.!
யாழ். வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி, ஆழியவளை உட்பட்ட 20 ஏக்கர் அரச காணியை மசாஜ் நிலையம் அமைப்பதற்காக இந்தியாவின் தனியார் நிறுவனத்திற்கு கொடுப்பதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
28.8.2026 அன்று வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் எம்.பி தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மசாஜ் நிலையம், தியான மண்டபம் அமைப்பதற்காக இந்திய தனியார் நிறுவனம் ஒன்றிற்கு வெற்றிலைக்கேணி, ஆழியவளை பகுதியை உள்ளடக்கிய 20 ஏக்கர் நிலப்பரப்பை குத்தகை அடிப்படையில் கொடுப்பதற்கு தீர்மானம் முன்வைக்கப்பட்டது.
தங்களுடைய மண் பல வரலாற்றை கொண்டது, பல தியாகங்களைச் செய்த மண், ஆகவே வடமராட்சி கிழக்கு பகுதிக்கு மசாஜ் நிலையம் தேவை இல்லை என்று மக்கள் குறித்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வடமராட்சி கிழக்கில் தற்போதும் பல நூறு குடும்பங்கள் நிரந்தர காணியில்லாமல் தவிக்கின்ற போதும் மக்களுக்கு கொடுக்க வேண்டிய அரச காணியை தனியார் நிறுவனத்திற்கு கொடுப்பதற்கு ஏன் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுகின்ற போதும் அதனை தடுத்து நிறுத்தாமல் இளைய தலைமுறையை சீரழிக்கும் கழியாட்ட விடுதிகளை அமைப்பதற்கு முயற்சிப்பது ஏற்கத்தக்கதல்ல என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
மக்களுக்கு நன்மையற்ற அபிவிருத்தி திட்டங்களை முன்மொழிவதை உரியவர்கள் நிறுத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
