அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனநாயகத்தைக் கொ@லை செய்கின்றது அரசு!
இலங்கையில் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவோம் எனப் பெருமை பேசி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, 22ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து ஜனநாயகத்தைத் தலைகீழாக மாற்றி வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார.
மகாமான்ய டி.எஸ். சேனநாயக்க அரசியல் பீடத்தின் டிப்ளோமாதாரிகளுக்கான பட்டமளிப்பு விழாவில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“நிறைவேற்றுத்துறைக்கும் சட்டவாக்கத்துறைக்கும் இடையிலான அதிகாரப் பகிர்வைச் சீர்குலைக்கும் வகையில் 22ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் நீதிமன்றத்தையும் கௌரவ நீதிபதிகளையும் அவமதித்து, நீதி வழங்கும் செயற்பாட்டைப் படுகொலை செய்து சட்டத்தின் ஆட்சியை அரசு மீறி வருகின்றது.
கடந்த அரசு உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பின் மூலம் ஊழியர் சேமலாப நிதிக்குச் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி நாட்டை ஸ்திரமடைந்ததாகக் கூறியது போல், தற்போதைய அரசும் விவசாயிகளை மிதித்து நெல் ஒரு கிலோவுக்கு 17 ரூபா நட்டத்தை ஏற்படுத்துகின்றது. ஜனநாயக வரலாற்றில் மிகவும் தோல்வியடைந்த அரசாங்கம் இதுவே.
தீவிர சோசலிச முறை மூலம் செல்வத்தை உருவாக்க முடியாது. முதலாளித்துவத்தினாலேயே செல்வத்தை உற்பத்தி செய்ய முடியும் என்றாலும், அது சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்துவதால் ‘மனிதாபிமான முதலாளித்துவமும்’ ‘சமூகச் சந்தைப் பொருளாதாரமும்’ அவசியம்.
ஜே.ஆர். ஜயவர்தன மற்றும் ஆர். பிரேமதாஸ பின்பற்றிய நடுநிலைப் பாதையைப் போன்று, இடதுசாரி மற்றும் வலதுசாரி கொள்கைகளின் சிறந்த குணாம்சங்களை ஒன்றிணைக்க வேண்டும்.” – என்றார்.
நாட்டின் 1978 ஆம் ஆண்டு அரசமைப்பில் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மட்டுமே நீதிமன்றத்தில் சவால் விடுக்கக் கூடியவையாக உள்ளன என்றும், பொருளாதார, சமூக, கலாச்சார, கல்வி மற்றும் சுகாதார உரிமைகளும் நீதிமன்றத்தில் சவால் விடுக்கக்கூடிய அடிப்படை உரிமைகளாக மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.



















