சீன அதிகாரிகள் உரிய தகவல்களைத் தரவில்லை – நேபாளம் குற்றச்சாட்டு!
நேபாளம் மற்றும் சீனாவைச் சேர்ந்த அதிகாரிகள் கடந்த மே 27 அன்று காத்மாண்டுவில் சந்தித்து பனிப்பாறை அபாயங்கள் மற்றும் வெள்ளப் பெருக்கு குறித்து விவாதித்துள்ளனர்.
எனினும் பனிப்பாறைகளின் இயக்கம் மற்றும் நீர்மட்டம் குறித்த கூடுதல் தரவுகளை சீனா உடனடியாகப் பகிர்ந்து கொள்ளவில்லை என்று நேபாள அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனினும் தாங்கள் உரிய நேரத்தில் மழை மற்றும் வானிலை முன்னறிவிப்புகளைப் பகிர்ந்து வருவதாக சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதும், தொலைதூர மலைப்பகுதியில் உள்ள ஆபத்துகளைக் கண்காணிப்பதில் சவால்கள் இருப்பதாக சீனத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரழிவின் போது நீர்மட்டத் தரவுகள் உடனடியாகக் கிடைக்காததால் எச்சரிக்கை செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக நேபாள வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், உயிர்களைக் காக்க இந்தியாவுடன் உள்ளது போல சீனாவுடனும் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒருமுறை தரவுகளைப் பகிர்ந்துகொள்ளும் முறையான ஒப்பந்தத்தை எதிர்காலத்தில் ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக நேபாள அதிகாரிகள் குறிப்பிட்0டுள்ளனர்.
இதேவேளை, உலக வெப்பமயமாதல் காரணமாக இமயமலைப் பகுதியில் பனிப்பாறைகள் வேகமாக உருகிவருவதே இதுபோன்ற கோர விபத்துகளுக்கு முக்கியக் காரணம் என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.