மட்டக்களப்பில் போ*தைப் பாவனையில் மாணவர்கள்; விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை.!
மது பாவிப்பவர்களை விட போதைப்பொருள் பாவனையாளர்களின் பாவனை மிகவும் அதிகமாகவும், அந்த குடும்ப நிலை மிகவும் சீரழிந்ததாகவும் இருக்கிறது. மாணவர்கள் மத்தியில் மிகவும் அதிகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. மாணவர்களை மீட்பதற்கு இப்போது ஒரு புனர்வாழ்வு நிலையமும் இல்லை என விமோசனா இல்லத்தின் பணிப்பாளர் திருமதி செல்விகா சகாதேவன் தெரிவித்தார்.
மட்டு.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இன்றைய காலகட்டத்திலே மது, போதைப்பொருள் பாவனை என்பது நாடளாவிய ரீதியிலே மிகவும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. அந்த வகையிலே நாங்கள் இந்தச் சேவையைச் செய்து அதிகமான வெற்றியையும் கண்டிருக்கிறோம்.
ஆகவே, தற்போது நாங்கள் ஒரு வாடகை இடத்திலேயே இந்தச் சேவையைச் செய்து வருகிறோம். எங்களிடம் குணமடைந்தவர் அதிகமாக மட்டக்களப்பில், கொழும்பில், யாழ்ப்பாணத்தில், இலங்கையில் அத்தனை மாவட்டங்களிலும் இருக்கிறார்கள். அதுமாத்திரமன்றி வெளிநாடுகளிலும் குணமடைந்து டுபாய், ஓமான், ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் இவர்கள் இருக்கிறார்கள்.
எனவே எதிர்வரும் காலங்களில் எங்களுக்கு அரசாங்கம் ஒரு ஏக்கர் காணியைத் தந்திருக்கிறார்கள். அதில் நான் கட்டிடம் ஒன்றை அமைத்து இந்தச் சேவையை மேலும் திறம்படச் செய்ய எண்ணியுள்ளேன்.
தற்போது நான் வாடகைக்கு இருக்கும் இடத்தை உரிமையாளர்களுக்கு அந்தக் கட்டிடம் தேவைப்படுவதால் இன்னும் ஒரு இடத்திற்குள் நகர வேண்டிய தேவை உள்ளதால், இன்னொரு இடத்தைக் கண்டுபிடித்து நாங்கள் செல்வது மிகவும் கடினமாக இருக்கிறது.
ஆகவே அரசாங்கத்தால் எங்களுக்குத் தரப்பட்ட அந்தக் காணியில் எங்களுக்கு புதியதொரு கட்டிடத்தை அமைத்துத் தந்தால் இலகுவாக இருக்கும்.
நான் அதிமேதகு ஜனாதிபதிக்கு சொல்ல விரும்புகிறேன் என்வென்றால், இன்றைய காலத்தில் போதைப்பொருட்களைக் கட்டுப்படுத்துவதற்கும் புனர்வாழ்வு நடவடிக்கைக்குமான அதிக கவனம் செலுத்தப்படுகிறது. ஆகவே நாங்கள் வெற்றியாக இந்தச் சேவையைச் செய்ய, எங்களுக்கும் இந்த உதவியைப் பெற்றுக்கொடுக்க முயற்சி எடுக்குமாறு நான் தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன்.
ஆண்களுக்கு மாத்திரமே தற்காலத்தில் இந்தச் சேவையை வழங்கி வருகிறோம். பெண்களுக்கும் இந்தச் சேவை தேவையாக இருப்பதனால், இதனை நாங்கள் தொடர்ச்சியாகச் சிறந்த முறையில் செய்யத் தீர்மானித்திருக்கிறோம்.
நலன் விரும்பிகளும், தனவந்தர்களும் எங்களுக்காக இந்த உதவியை மேற்கொண்டு தரும்படி மிகவும் தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன்.
மதுப் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. ஆனால் மது பாவிப்பவர்களை விட போதைப்பொருள் பாவனையாளர்களின் பாவனை மிகவும் அதிகமாகவும், அந்த குடும்ப நிலை மிகவும் சீரழிந்ததாகவும் இருக்கிறது.
மாணவர்கள் மத்தியில் மிகவும் அதிகமாகப் பரவிக் கொண்டிருக்கும் போதைப்பொருள் பாவனையிலிருந்து மாணவர்களை மீட்பதற்கு இப்போது ஒரு புனர்வாழ்வு நிலையமும் இல்லை.
18 வயதிற்குட்பட்டவர்களுக்கான இடம் இல்லாதபடியால் ‘ப்ரோபேஷன் டிபார்ட்மென்ட்’ எங்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர் “இந்தப் பிள்ளைகளையும் உங்களிடம் வைத்து நீங்கள் குணமாக்க இயலுமா?” என்று.
அந்த வகையிலே நாங்கள் பல பிள்ளைகளைப் புனர்வாழ்வு செய்து அனுப்பியிருக்கிறோம். ஆனால் சிறுவர்களுக்கான சரியான ஒரு புனர்வாழ்வு நிலையம் அமைக்க வேண்டும்.
கண்டியில் அபாயகர ஒளடதங்கள் திணைக்களத்தால் ஒன்று இருப்பதாக அறிகிறேன். ஆனால் அங்கு மிகவும் அதிகமான கோரிக்கைகள் (கேள்விகள்) இருப்பதால் இடப்பற்றாக்குறையாக இருக்கிறது.
நான் நினைக்கிறேன் மட்டக்களப்பில் இப்படி ஒரு நிலையம் ஆரம்பித்தால் மிகவும் உதவியாக இருக்கும்.
இப்போது எங்களிடம் வருகிற பிள்ளைகள் 24 வயதிற்கு குறைந்த பிள்ளைகள், எங்களிடம் 13 வயதுப் பிள்ளையும் வந்திருக்கிறது. ஆகவே இந்தக்காலகட்டத்தில் இதில் மிகவும் நாங்கள் கவனம் செலுத்துவது தேவையாக இருக்கிறது.