மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை நேரடியாக மத்திய அரசின் கீழ் கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) வைத்தியசாலைக்கு வருகை தந்த நிலையில், குறித்த பயிற்சி மருத்துவ அதிகாரிகளை வரவேற்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்றது.
இதன் போது விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் நல்ல உறவுகளை ஏற்படுத்துவதும், எங்களுடைய மாவட்டம், இந்த வைத்தியசாலை நல்ல முறையில் இன்னும் உயர்வதும் எங்களுடைய கையில்தான் இருக்கிறது. ஒற்றுமை வேண்டும். தேவையற்ற பிரிவினைகள் இருக்கக் கூடாது. எங்களுக்கு நல்ல சேவை செய்வதுதான் ஒரே நோக்கமாக இருக்க வேண்டும். வருகின்ற புதியவர்களோடு இணைந்து நல்ல முறையில் செயல்படுகின்ற நல்ல மனப்பான்மை எங்களுக்கு இருக்க வேண்டும்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மேலும் வைத்தியர்கள் நியமிக்கப்பட்ட உள்ளதாகவும், அவர்கள் வெகு விரைவில் வருகை தர உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை நேரடியாக மத்திய அரசின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாக உள்ளது. அதற்காக நான் எல்லா முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
மாவட்டத்தில் உள்ள ஒரு வைத்தியசாலை மத்திய அரசின் கீழ் செயல்பட முடியும். ஆகவே, இந்த வேளையிலே அரசியல் ரீதியான ஆதரவையும், அரச ரீதியான ஆதரவையும் நாங்கள் கேட்டு நிற்கின்றோம்.
மன்னார் மக்களுக்கு தேவையான விடயம். இதில் இரண்டாவது கருத்து இருக்கக் கூடாது. தேவையற்ற குழப்பங்களும் இருக்கக் கூடாது. ஆகவே, அந்த குழப்பங்களையும் நாங்கள் அறிவோம். இதனுடைய பின்னணியையும் நாங்கள் அறிவோம்.
இருந்தும் சற்று அமைதியாக நாங்கள் இந்த முன்னெடுப்புகளை செய்கின்றோம். அதை விட அமைதியாக வைத்தியசாலை பணிப்பாளர் தனது வேலைகளை செய்து கொண்டிருப்பது மிகவும் போற்றத்தக்கது. எங்களுடைய மண்ணிலே அதாவது மன்னார் மாவட்டத்தில் நிறைய வைத்தியர்கள் இருக்கிறார்கள். அனைவரும் மாவட்டத்தில் கடமையாற்ற வர வேண்டும்.
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த நிறைய வைத்தியர்கள் உள்ள போதும் தமது மண்ணில் கடமையாற்ற இங்கு வருவதற்கு மறுக்கிறார்கள் என்று இங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே அவர்கள் இங்கே வந்து சேவை செய்ய வேண்டும்.
மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற வைத்தியர்கள் கூடியளவு எங்களுக்கு நிறைய உதவி செய்கிறார்கள். இங்குள்ள வைத்தியர்களிடம் நல்ல முறையில் அணுகி அவர்களுடைய அர்ப்பணத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். என அவர் மேலும் தெரிவித்தார்.