பெண் சுற்றுலாப் பயணி உயிரிழப்பு.!
பெந்தோட்டை கடற்பரப்பில் பாராசெயில் சவாரியின் போது ஏற்பட்ட விபத்தில் 31 வயதுடைய பாலஸ்தீன பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று புதன்கிழமை (29) மாலை பெந்தோட்டை கடற்கரைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பெந்தோட்டை கடலோர வீதியை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஒன்றினால் நடத்தப்பட்ட பாராசெயில் சவாரியின் போது, பாராசெயில் திடீரென கடலில் விழுந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தின் போது பாராசெயிலில் பயணித்த பாலஸ்தீன பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதேவேளை, பாராசெயிலை இயக்கிய கொலம்பியா நாட்டைச் சேர்ந்த நபர் உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நாகொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிவதற்காக பெந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.