நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்கள்; 6 பேர் உயிரிழப்பு.!
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று (27) திங்கட்கிழமை இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருக்கோவில் – பொத்துவில் வீதியின் விநாயகபுரம் பகுதியில் நேற்று இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் 49 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொத்துவில் நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி சாரதி கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வீதியோரத்திலிருந்த கொங்றீட் தூண் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த சாரதி, பின்புறத்தில் பயணித்த இரண்டு பெண்கள் மற்றும் இரு சிறுவர்கள் திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், தீவிர சிகிச்சையிலிருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த மற்றைய பெண்ணும் இரு சிறுவர்களும் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன், அத்துருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதிவேக நெடுஞ்சாலையின் 6 ஆம் கட்டை பகுதிக்கு அருகில் நேற்று அதிகாலை மற்றுமொரு வீதி விபத்து பதிவாகியுள்ளது.
கெரவலப்பிட்டியவில் இருந்து கொட்டாவை நோக்கிச் சென்ற லொறி ஒன்று, இயந்திரக் கோளாறு காரணமாக வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறியின் பின்புறத்தில் மோதியுள்ளது.
இதில் லொறியின் சாரதியும் முன் ஆசனத்தில் பயணித்த நபரும் பலத்த காயமடைந்து ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 21 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, குருநாகல் – புத்தளம் வீதியின் வேரபொல பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் 67 வயதுடைய மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் உயிரிழந்துள்ளார்.
புத்தளம் நோக்கிச் சென்ற கார் ஒன்று பிறிதொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் வாரியப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதோடு, காரின் சாரதியும் அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், திஸ்ஸமஹாராம குளம் வீதியின் 6 ஆம் கட்டை பகுதிக்கு அருகில் நேற்றிரவு தெபரவெவிலிருந்து கதிர்காமம் நோக்கிச் சென்ற பேருந்து மோதி 38 வயதுடைய பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த அவர் தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பங்கதெனிய – பள்ளம வீதியின் 5 ஆம் கட்டை பகுதிக்கு அருகில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் 24 வயதுடைய மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் உயிரிழந்துள்ளார்.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் படுகாயமடைந்த இளைஞர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதற்கிடையில், புறக்கோட்டை – கொதட்டுவ வீதியில் கொதட்டுவ நகருக்கு அருகில் புறக்கோட்டை நோக்கிச் சென்ற பேருந்துடன் எதிர்த்திசையில் வந்த முச்சக்கரவண்டி மோதியதில் 37 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி மற்றும் பின் இருக்கையில் பயணித்த ஒரு ஆண் மற்றும் பெண் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சாரதி ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.
இதேவேளை, மேற்படி விபத்துச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.