தமிழ் – முஸ்லிம் பேரவை கூட்டணியின் பிரதிநிதியாக இராதாகிருஷ்ணன் பெயரீடு.!
தமிழ் – முஸ்லிம் பேரவையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் இடம்பெறுவார் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
இன்று சனிக்கிழமை நடைபெற்ற தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைமைக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவையில் கூட்டணியின் பிரதிநிதியாக, அதன் பிரதித் தலைவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் பெயரிடப்பட்டுள்ளார்.
மேலும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அரசியல் குழு உறுப்பினரான பரத் அருள்சாமியும் இப்பேரவையில் கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், இராதாகிருஷ்ணன் எம்.பி.க்குத் துணையாகச் செயற்படுவார் என்றும் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.