பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் காட்டுத்தீ; மக்கள் வெளியேற்றம்.!
பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் காட்டுத்தீ மிகக் கொடூரமாகப் பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த காட்டு தீ காரணமாக, இதுவரை இரண்டு நாடுகளிலும் சேர்த்து 2,20,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஸ்பெயின் தலைநகர் மத்ரித்துக்கு மேற்கே மூன்று இடங்களில் பற்றி எரிந்த காட்டுத்தீ, ஒன்றாக இணைந்து பெரும் தீப்பிழம்பாக மாறியுள்ளது. இதனால் அங்கு நிலைமை மிக மோசமடைந்துள்ளது.
இதனால் ஸ்பெயின் அரசு தேசிய அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.
மத்ரித் பகுதியில் சுமார் 25,000 மக்கள் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளனர், மேலும் 40,000 பேர் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
காட்டுத்தீ வரலாற்று சிறப்புமிக்க ‘எல் எஸ்கோரியல்’ நகரை நெருங்குவதைத் தடுக்க, ஸ்பெயினின் இராணுவ அவசரக்காலப் படைகள் களமிறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.