மீற்றர் வட்டிக் கொடூரம்; அடாவடித்தனமாக பெருமளவு சொத்துக்கள் பறிப்பதாக முறைப்பாடு.!
யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் தெற்கு, கருமாரி அம்மன் கோவிலடியைச் சேர்ந்த ரகுவரன் என்பவர் மீது மீற்றர் வட்டிக்கு பணம் வழங்குதல், பணத்தை மீள வழங்காதவர்களை அச்சுறுத்தல், சொத்து அபகரிப்பு மற்றும் திருமண மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை பாதிக்கப்பட்டவர்கள் முன்வைத்துள்ளனர்.
அந்தவகையில், இவர் வாகனங்களின் பதிவு புத்தகம் மற்றும் காணி உறுதி பத்திரங்களை பெற்றுக்கொண்டு ஏழை மக்களுக்கு 10 சதவீதத்திற்கும் அதிக வட்டிக்கு பணம் வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட காலத்திற்குள் கடனை முழுமையாக செலுத்த முடியாதபோதோ அல்லது வட்டிப் பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டாலோ, பொலிஸார் மற்றும் அடியாட்களை வைத்து அவர்களது காணிகள் மற்றும் வாகனங்களை அபகரிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுகிறது.
அத்துடன், கடன் பெற்றவர்களின் வீடுகளுக்குச் சென்று அச்சுறுத்துதல் விடுவதுடன் வாள்வெட்டு தாக்குதல் நடத்துவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் வவுனியாவில் அதிக சீதனத்துடன் பெண் ஒருவரை திருமணம் செய்து, அவருக்கு நான்கு வயது ஆண் குழந்தை இருப்பதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் டுபாயில் வேலை செய்தபோது, தான் பிரான்சில் வசிப்பதாகக் கூறி புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், இவர் பல பெண்களை ஏமாற்றி பணம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவரது செயற்பாடுகளுக்கு அவரது மாமியாரான செல்வராசா சுசித்தா உடந்தையாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே, இவரது இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் உரிய அதிகாரிகள் உடனடியாக விசாரணைகள் மேற்கொண்டு சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் சார்பாகவும் தினகரன் சார்பாகவும் கோரிக்கை விடுக்கின்றோம்.
குற்றத்தை அம்பலப்படுத்துவோம் குற்றமற்ற நாட்டை உருவாக்குவோம்.