உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
25 சனி

கடந்த 7 மாதங்களில் 21 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்!

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
54 பார்வைகள்

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 21 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அவற்றில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று (23) மூன்று மணித்தியால இடைவெளியில் தெமட்டகொடை மற்றும் வத்தளை பகுதிகளில் இரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவற்றில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார்.

வத்தளை, பள்ளியவத்தை பகுதியில் அமைந்துள்ள மண்டபம் ஒன்றில் நேற்று இரவு 9.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ‘குடு ரொஷான்’ என்பவரைக் இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர் வந்த வேளையில் அவர் புகைப்பிடிப்பதற்காக வெளியில் சென்றிருந்தார்.

இதன்போது, துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், ‘குடு ரொஷான்’ அணிந்திருந்த உடைக்கு நிகரான ஆடையை அணிந்திருந்த மற்றொருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

அவர்கள் இருவரையும் அடையாளம் காண முடியாததாலேயே துப்பாக்கிச்சூடு நடத்தியவர் இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் பொரளை, வனாத்தமுல்ல பகுதியைச் சேர்ந்த ‘வனாத்தே சுமேதா’ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

‘குடு ரொஷான்’ என்பவரின் சகோதரரின் மூன்று வயது மகளின் பிறந்தநாள் விழா நேற்று மாலை நடைபெற்றுள்ளதாகவும், அதில் அவர் ‘குடு ரொஷான்’ என்பவருடன் கலந்துகொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொலை செய்ய வந்த துப்பாக்கிதாரி, விழாவிற்கு வந்தவர் போல் நடனமாடிக்கொண்டே சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிதாரி வந்த மோட்டார் வாகனம் ஜா-எல பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவே (23) பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை ‘மட்டக்குளி மனோஜ்’ என்பவர் வழிநடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதேவேளை, இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இரண்டு பெண்கள் உட்பட நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

துப்பாக்கிசூடு நடத்தியவர்களுக்கு உதவி புரிந்தமை தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேல் மாகாண வடக்கிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காலிங்க ஜயசிங்க மற்றும் களனி பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவன் அசங்க ஆகியோரின் வழிகாட்டலில் 5 பொலிஸ் குழுக்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதேவேளை, தெமட்டகொடை, குப்பியாவத்தை பகுதியில் நேற்று மாலை 6.35 மணியளவில் மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தும் காட்சி சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

அங்கு அவர்கள் இலக்கு வைத்த நபர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஓடும்போதும், அவரைத் துரத்தித் துரத்திச் சுடும் காட்சி அதில் பதிவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

காயமடைந்த நபர் பொரளை, வனாத்தமுல்ல பகுதியைச் சேர்ந்த தினோத் வருண பண்டார என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது நெஞ்சுப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடம் ஜூலை மாதம் பொரளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் துப்பாக்கிதாரிக்கு துப்பாக்கியை வழாங்கியவர் இவரே என பொலிஸார் தெரிவித்தனர்.

அச்சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட இவர், தற்போது பொலிஸ் காவலில் உள்ள ‘வனாத்தே துமிந்த’ என்ற குற்றவாளியின் நெருங்கிய சகா ஆவார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ‘வனாத்தே சது’ என்ற குற்றவாளியின் தரப்பினால் வழிநடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இவ்வாறானதொரு பின்னணியில், தேவேந்திரமுனை தேவாலயத்தின் பெரஹரா பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்று வருகின்றது.

அதன் பாதுகாப்பிற்காக 600 பொலிஸ் அதிகாரிகளும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பிள்ளையானிற்கு விளக்கமறியல் நீடிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர், பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

19 0 0
இலங்கை செய்திகள்

சிறை நெரிசலைக் குறைக்க வீட்டுக்காவலை அறிமுகப்படுத்தவும் யோசனை!

இலங்கையின் சிறைச்சாலைகளில் கொள்ளளவை விட நான்கு மடங்கு அதிகமான கைதிகள் அங்குள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். பூகொடை புதிய…

18 0 0
இலங்கை செய்திகள்

வத்தளை துப்பாக்கிச் சூடு – இரு பெண்கள் உட்பட நால்வர் கைது!

வத்தளை, கதிரான பள்ளியவத்தை பகுதியில் நபரொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உதவி புரிந்த குற்றச்சாட்டின் பேரில் இரு பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களைக்…

62 0 0
இலங்கை செய்திகள்

க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கான அறிவித்தல்!

2026 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகள், தங்களது அனுமதி அட்டைகளில் திருத்தங்கள் ஏதும் இருப்பின் அதனை வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி…

33 0 0