செம்மணியில் மேலும் நான்கு எலும்புக்கூடுகள் இதுவரை 471 அடையாளம்!
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப்புதைகுழியில் நேற்று புதன்கிழமை புதிதாக நான்கு என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவற்றில் பதினொன்று என்புக் கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப்புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்கள் என இதுவரையில் தொண்ணூற்றுநான்கு நாள்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இதுவரை நானூற்றுஎழுபத்தொன்று என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுள் நானூற்று ஐம்பத்தைந்து என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும் பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, நெதர்லாந்து நாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட எட்டு பேர் கொண்ட உயர்மட்டக் குழுவினர் நேற்று செம்மணி மனிதப்புதைகுழிப் பகுதிக்குச் சென்று, அகழ்வுப் பணியினை நேரில் பார்வையிட்டதுடன், அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுவரும் நிபுணர் குழுவினருடன் நிலவரங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.