உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
17 வெள்ளி

புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதிய சிக்கல்களை விரைவில் தீர்க்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
68 பார்வைகள்

வெளிநாட்டில் பணிப்புரியும் ஊழியர்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சிக்கல்களை விரைவாகத் தீர்த்து, அதனை இம்முறை வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டிற்காக ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு மற்றும் 2027 வரவுசெலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இக்கலந்துரையாடல் இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

தற்போது நாட்டுக்கு வெளிநாட்டு செலாவணியை ஈட்டித் தரும் பிரதான துறைகளில் ஒன்றாக விளங்கும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்காக, மிகவும் முறையான ஓய்வூதியத் திட்டமொன்றின் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

சுற்றுலாத் துறை சார்ந்த முன்மொழிவுகளை மாவட்ட மட்டத்தில் மிகவும் செயற்திறனுடன் முன்னெடுப்பதற்காக, அந்தத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீடுகளை மாவட்ட செயலாளர்களுக்கான நிதி இருப்புக்கு நேரடியாக வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

இதன் மூலம், மாவட்ட அபிவிருத்திக் குழுக்கள் மற்றும் சுற்றுலாத் குழுக்களின் சிறந்த ஒருங்கிணைப்புடன் சம்பந்தப்பட்ட சுற்றுலா அபிவிருத்தித் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிகிரியா, கலேவெல மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் செயல்படுத்த முன்மொழியப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை, சுற்றுலா அமைச்சு மற்றும் தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து செயல்படுத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கினார்.

ஒவ்வொரு நிறுவனமும் தனித்தனியாகச் செயல்படுவதற்குப் பதிலாக, ஒரு பொதுவான திட்டத்தின் கீழ் செயல்படுவதன் மூலம் நேரத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்த முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

திட்டங்களைச் செயல்படுத்தும்போது கொள்முதல் செயல்முறையில் ஏற்படும் தாமதங்கள் காரணமாக எழுந்துள்ள சிக்கல் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இதற்கான தீர்வாக, அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்திலிருந்தே கொள்முதல் நடவடிக்கைகளைத் தொடங்கக் கூடிய வகையில் நிதி அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ள புதிய திட்டத்தைப் பின்பற்றுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

மேலும், சுற்றுலா அமைச்சின் கீழ் உள்ள நிர்மாணத்துறை போன்ற தனித்துவமான கொள்முதல் தேவைகளுக்காக தனியான தலையீட்டை மேற்கொண்டு, அந்தச் செயல்முறையை விரைவுபடுத்தவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக எதிர்வரும் காலத்தில் நடத்தப்படவுள்ள ஆசிய ஒளிபரப்பாளர்களின் மாநாடு போன்ற திட்டங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், தூதரக சேவைகளை மேலும் செயற்திறனுள்ளதாக மாற்றுவதற்காக டிஜிட்டல் அமைச்சுடன் இணைந்து தொடர்ந்து திட்டங்களை தயாரிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

சுற்றுலாத்துறை அமைச்சின் கீழ் உள்ள வளங்கள் மற்றும் காணிகள் குறித்த முறையான அறிக்கை கடந்த அரசாங்கங்களின் கீழ் தயாரிக்கப்படவில்லை என்பது இதன்போது சுட்டிக்காட்டப்பட்டதுடன், அது தொடர்பான அறிக்கையை தயாரிக்கும் பணிகளை விரைவுபடுத்துமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

2030 ஆம் ஆண்டளவில் சுற்றுலாத் துறைக்கு 8 இலட்சம் மனித வளம் தேவைப்படும் என இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், அதற்காக தற்போது ஹோட்டல் பாடசாலைகள் மூலம் நடத்தப்படும் பயிற்சிப் பாடநெறிகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றிணைவு சிறந்த அறிகுறி

தமிழ் பேசும் ஆறு அரசியல் தரப்புகள் ஒன்றிணைவது தமிழ் மக்களுக்கு ஒரு சாதகமான அறிகுறியாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான…

47 0 0
இலங்கை செய்திகள்

கடுவலை நவகமுவவில் சற்றுமுன் துப்பாக்கிச் சூடு!

கடுவலை – நவகமுவ வந்துராமுல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த துப்பாக்கிச் சூடு இன்று (16) இரவு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்…

87 0 0
இலங்கை செய்திகள்

புதிய உலகை வழிநடத்த இளைஞர்கள் தலைமைத்துவத்தை பொறுப்பேற்க வேண்டும்!

தங்கள் தலைமுறையினர் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து முடித்துவிட்டதாகவும், தற்போதைய புதிய தலைமுறையினரின் (Gen Z) சிந்தனைகளையும் தேவைகளையும் அவர்களே நன்கு அறிவார்கள் என்றும் முன்னாள் ஜனாதிபதி…

62 0 0
இலங்கை செய்திகள்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மீனவர்கள் சார்பில் முறைப்பாடு!

மட்டக்களப்பு மாவட்ட மீனவர்களின் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாக்கவும், அண்மைக்காலமாக அதிகரித்து வரும் சட்டவிரோத மற்றும் முறையற்ற மீன்பிடி நடவடிக்கைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ளும் முகமாகவும் இலங்கை மனித…

62 0 0