தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷ்யாமிளா பெரேராவுக்குப் பிணை!
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷ்யாமிளா பெரேராவை, தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம அனுமதித்துள்ளார்.
அத்துடன், சந்தேகநபரின் வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பிணையில் சென்றதன் பின்னர், வழக்கின் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கவோ அல்லது செல்வாக்கு செலுத்தவோ கூடாது என நீதவான் சந்தேகநபருக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளின் கருத்துகளையும், சந்தேகநபர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ முன்வைத்த வாதங்களையும் பரிசீலித்த பின்னரே நீதவான் சந்தேகநபருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளார்.