விபத்தில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு.!
மாத்தளையிலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று, லொறியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 29 வயதுடைய இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நேற்று அதிகாலை மதுராகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடா ஓயா பாலத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் குபுக்வெவ பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேற்படி இளைஞர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள், குடா ஓயா பாலத்துக்கு அருகில் சென்றபோது திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த லொறியுடன் பலமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞன், உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் லொறியின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.