ஆடு அடைக்கச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!!
மன்னார் பகுதியில் தனது ஆடுகளை பட்டியில் அடைக்கச் சென்ற இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் ,கவலையையும் ஏற்படுத்தி உள்ளது. மன்னார் கள்ளிக் கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அனோஜன் (வயது-28 ) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் தனது வீட்டில் இருந்து ஆட்டுப்பட்டி உள்ள இடத்தை நோக்கி சென்றதாக கூறப்படுகிறது. சனிக்கிழமை கடும் மழை பெய்துள்ள நிலையில் குறித்த இளைஞன் ஆட்டுப் பட்டிக்கு அருகில் இருந்து 16 ஆம் திகதி சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞருக்கு அடிக்கடி வலிப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் சனிக்கிழமையும் குறித்த இளைஞருக்கு வலிப்பு ஏற்பட்டதாகவும், இதன் போது தேங்கி கிடந்த நீரில் வீழ்ந்து உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இளைஞரின் மரணம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.