மழையின் கோரத்தால் குளத்தின் அணை உடைப்பு; மக்கள் தத்தளிப்பு.!
புத்தளம் – மதுரங்குளி பகுதியில் நிலவி வரும் மோசமான காலநிலை காரணமாக, பத்தேயம குளத்தின் அணை உடைந்து பெருக்கெடுத்த வெள்ளம் குடியிருப்புகளுக்குள் புகுந்ததில் 15 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.
நேற்று மாலை 5.30 மணியளவில் பெய்த பலத்த மழை காரணமாக பத்தேயம குளத்தின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்தது. இதனால் நீர் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் குளத்தின் அணைப்பகுதி சுமார் 15 அடி நீளத்திற்கு உடைந்து சேதமடைந்தது.
அணை உடைந்ததைத் தொடர்ந்து குளத்தில் இருந்த நீர் பெருகும் வேகத்துடன் அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்தது.
குளத்தைச் சூழவுள்ள சுமார் 15 வீடுகள் ஒரு அடிக்கும் மேலான வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
இதனால் வீடுகளிலிருந்த பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளதுடன், அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
குளத்து நீரை வெளியேற்றி, உடைந்த அணையைத் தற்காலிகமாகப் புனரமைப்பதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

