பாரவூர்தியுடன் மோதிய உந்துருளி; இளைஞன் உயிரிழப்பு.!
சீதுவை – கொட்டுகொட வீதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சீதுவை – கொட்டுகொட வீதியின் 3 கிலோமீற்றர் கம்பத்துக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கொட்டுகொட நோக்கி அதிவேகமாகப் பயணித்த உந்துருளி ஒன்று, அதற்கு எதிரே வந்த பாரவூர்தியுடன் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் படுகாயமடைந்த உந்துருளி சாரதி, உடனடியாக மீட்கப்பட்டு சீதுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவ்விபத்தில் மீகொட பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் தற்போது சீதுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பாக பாரவூர்தியின் சாரதி சீதுவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து நிகழ்ந்த விதம் குறித்து சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.