யாழில் பொலிஸ் உத்தியோகத்தர் கொ*லை; இருவர் கைது.!
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் அதிகாரியை உழவு இயந்திரத்தால் மோதிக் கொலை செய்ததுடன் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு படுகாயம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பிரதான சந்தேகநபர் தலைமறைவாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கொடிகாமம், கெற்பேலி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாகக் கொடிகாமம் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, கடந்த சனிக்கிழமை சம்பவ இடத்திற்கு இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் விரைந்துள்ளனர்.
இந்தநிலையில், பொலிஸாரைக் கண்டதும் உழவு இயந்திரத்தைச் செலுத்தி வந்தவர், தான் தப்பிப்பதற்காக அதன் வேகத்தை அதிகரித்து, பொலிஸார் இருவர் மீதும் மோதிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
இதன்போது உழவு இயந்திரம் மோதியதில், கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜென்ட் தர அதிகாரியான ஹெட்டியாராட்சி அல்பேட் (வயது 50) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அவருடன் சென்ற மற்றைய பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் உழவு இயந்திரத்தின் உரிமையாளரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியபோது அவரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையில், சம்பவ தினத்தன்று சாரதிக்கு உதவியாளராகச் சென்ற இளைஞன் தலைமறைவாக இருந்த நிலையில் நேற்று (31-03-2026) குறித்த இளைஞன் பாலாவி பகுதியில் தலைமறைவாக இருப்பதாகக் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் அந்த இளைஞனைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், சம்பவ தினத்தன்று உழவு இயந்திரத்தைச் செலுத்திய பிரதான சந்தேகநபர் தலைமறைவாக உள்ள நிலையில், தொடர்ந்து தேடுதல் நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.