இனப்பிரச்சினைக்கு சமஷ்டி தீர்வே அவசியம் – சாணக்கியன் வலியுறுத்தல்.!
இலங்கையின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வாக சமஷ்டி அடிப்படையிலான ஆட்சி அமைப்பும், உண்மையான அதிகாரப் பங்கீடும் அவசியம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்டினை அண்மையில் தனிப்பட்ட முறையில் சந்தித்து இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை வலியுறுத்தினார்.இந்தச் சந்திப்பில், தமிழ் மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் முக்கிய பிரச்சினைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காத நிலை, தொடரும் நில அபகரிப்புகள், இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறல் இல்லாமை ஆகியவை இன்னும் தீர்வு காணப்படாதவையாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், வடக்கு மற்றும் கிழக்குமாகாணங்களில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
வேலைவாய்ப்பு பற்றாக்குறை, முதலீடுகள் இல்லாமை மற்றும் போருக்குப் பிந்தைய மறுசீரமைப்பு பணிகள் முழுமையடையாத நிலை ஆகியவை மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.பல்வேறு இன, மொழி மற்றும் கலாசார பன்முகத்தன்மையைக் கொண்ட நாடுகள் சமஷ்டி ஆட்சிமுறையின் மூலம் அதிகாரப் பங்கீட்டை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருவதை எடுத்துக்காட்டிய அவர், அவை இலங்கைக்கு சிறந்த முன்னுதாரணங்களாக அமையும் என்றும் தெரிவித்தார்.
இலங்கையில் நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்கு நீதி, பொறுப்புக்கூறல், பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பங்கீடு ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது இச்சந்திப்பில் மீண்டும் வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.