ஐ.நா சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கும் வடக்கு ஆளுநருக்கும் இடையிலான கலந்துரையாடல்!
இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் அண்ட்ரூ பிரஞ்ச் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் ஆகியோருக்கிடையிலான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் இன்று (24) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
கலந்துரையாடலின் தொடக்கத்தில், மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் முன்னுரிமைத் தேவைகள் குறித்து ஆளுநர் விளக்கமளித்தார்.
பொருளாதார அபிவிருத்தி, காணிப் பிரச்சினைகள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், நிலைத்த வாழ்வாதாரம் ஆகிய முக்கிய துறைகள் தொடர்பாக அவர் கருத்துகளை முன்வைத்தார்.காணிப் பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவித்த ஆளுநர், கடந்த காலப் போர்ச் சூழ்நிலை காரணமாக பலரது காணி ஆவணங்கள் அழிந்துவிட்டதாக சுட்டிக்காட்டினார்.
இதனால் மக்கள் தமது காணிகளுக்கான உரிமையை நிரூபிக்க முடியாமல் சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தார்.இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பது அவசரத் தேவையாக உள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.மேலும், சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை மேம்படுத்துதல், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க ஒற்றைச் சாளர முறைமை அமைத்தல், காணி விடுவிப்பு நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச நிதி ஆதரவுகளைப் பெறுதல் ஆகிய துறைகளில் ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்பு அவசியம் எனக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர், வடக்கு மாகாணத்தின் சவால்களை ஆளுநர் திறமையாக கையாளுவதைப் பாராட்டினார். அண்மைய வெள்ளப் பேரிடர் காலத்தில் அரச அதிகாரிகள் ஆற்றிய சேவையையும் அவர் பாராட்டினார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக சர்வதேச நிதி உதவிகள் குறைந்துள்ள போதிலும், பசுமைக் காலநிலை நிதி, இழப்பு மற்றும் சேத நிதி போன்ற மாற்று வழிகள் மூலம் உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர்தெரிவித்தார்.
மேலும், வடக்கு மாகாணத்துக்கான முதலீடுகளை ஈர்க்கும் முயற்சிகளில் தொடர்ந்து ஆதரவு வழங்கப்படும் என உறுதியளித்தார்.
கலந்துரையாடலில் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் தமது பகுதிகளில் நிலவும் காணிப் பிரச்சினைகள் குறித்து கருத்துகளை முன்வைத்தனர்.
குறிப்பாக வனத் திணைக்களங்களுடன் தொடர்புடைய காணி முரண்பாடுகள் குறித்து அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இறுதியாக கருத்து தெரிவித்த மாகாண காணி ஆணையாளர், மாகாணத்தில் பெருமளவிலான காணி ஆவணங்கள் பரிசீலனைக்கு உள்ளதாகவும், அவற்றை விரைவாகச் செயல்படுத்த கூடுதல் மனிதவளமும் ஊக்குவிப்பும் தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டார்.இந்த உயர்மட்டக் கலந்துரையாடலில் அரச அதிகாரிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.