கத்தி முனையில் நகை திருட்டு; 8 மணிநேரம் கழித்து உதவ வந்த பொலிஸார்.!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு சந்தியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இன்று அதிகாலை நகை கொள்ளை இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இன்று அதிகாலை 1:00 மணியளவில் மதிலால் பாய்ந்து 3 திருடர்கள் குறித்த வீட்டுக்குள் புகுந்து வீட்டில் இருந்த கணவனை தாக்கிவிட்டு பின்னர் மனைவியின் கழுத்தில் கத்தியை வைத்து சுமார் 5 பவுண் நகையை அவரது கழுத்திலிருந்து அறுத்த பின்னர் குறித்த பெண்ணையும் தாக்கியுள்ளதுடன் அரை மணி நேரத்திற்கு அதிகநேரம் மணல் மண் அள்ளி கொட்டியும், இரும்பாலும் தாக்கியுள்ளனர். இதனை சுதாகரித்துக் கொண்ட கணவர் திருடன் ஒருவனை தாக்கியத்தில் திருடன் காயத்துடன் இரத்தம் சிந்த சிந்த தப்பிச் சென்றுள்ளார். இதில் படுகாயமடைந்த கணவர் பருத்தித்துறை அதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை திருடர்கள் கத்தி முனையில் இவர்களை தாக்கி அச்சுறுத்திக் கொண்டிருந்த நிலையில் மருதங்கேணி பொலிஸார் மற்றும் அவசர இலக்கங்களான 119, 118 ஆகியவற்றிற்கு அழைப்பு மேற்கொண்டு உதவி கோரியும் பொலிஸார் 8 மணிநேரம் கழித்து சரியாக காலை 9:15 மணிக்கே சம்பவம் நடந்த இடத்திற்கு உதவுவதற்கும் முறைப்பாடு பெற்றுக்கொள்ளவும் சென்றுள்ளனர்.
குறித்த வீட்டில் நேற்றுடன் மூன்றாவது தடவையாக குறித்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த கொள்ளை சம்பவத்தில் 3 கொள்ளையர்கள் ஈடுபட்டமை காணொளியில் பதிவாகியுள்ளது.

