சர்வதேச போர்ச் சூழல் குறித்து ஜனாதிபதி விளக்கம்.!
சர்வதேச போர் சூழல் இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விளக்கம் வழங்கியுள்ளார்.இது குறித்து கருத்து தெரிவித்த அவர், இலங்கை மத்திய வங்கி சமீபத்தில் நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பான முன்னறிவிப்பு அறிக்கையை அரசாங்கத்திற்கு சமர்ப்பித்துள்ளதாகக் கூறினார். அதில் நிதிச் சந்தையில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் மூன்று நிலைகளில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதன்படி, தற்போதைய நிலை, அதைவிட தீவிரமான நடுத்தர நிலை மற்றும் எதிர்பாராத அளவில் ஏற்படக்கூடிய மிக மோசமான நிலை என மூன்று கட்டங்களாக நிதிச் சந்தை மாற்றங்கள் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.நாட்டின் பொருளாதாரம், உணவு பாதுகாப்பு, வேலைவாய்ப்பு மற்றும் நிதி அமைச்சின் நடவடிக்கைகள் தொடர்பிலும் தொடர்ந்தும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு முக்கிய முன்னுரிமையாக கருதப்படுவதாகக் கூறிய அவர், நிலைமை மோசமடைந்தால் அவர்களை பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்து வருவதற்கான திட்டங்கள் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பையும் அரசு உறுதிப்படுத்தி வருவதாகவும், நாட்டை விட்டு வெளியேற முடியாத சுற்றுலாப் பயணிகளுக்கு இரண்டு வார இலவச விசா வழங்குவது உள்ளிட்ட மாற்று ஏற்பாடுகள் பரிசீலனையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையில், மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லவிருந்த சில சரக்குக் கப்பல்கள் தற்போது கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு தேவையான சலுகைகள் மற்றும் கொள்கலன்கள் வைக்க இடவசதி ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தேயிலை ஏற்றுமதி உள்ளிட்ட பொருளாதாரத்திற்கு நேரடி தாக்கம் ஏற்படுத்தக்கூடிய விடயங்கள் குறித்து அரசு கவனம் செலுத்தி வருவதாகவும், இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் இது தொடர்பில் இந்திய அரசுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.