முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு விரைவில் நிரந்தர தீர்வுகளை வழங்குமாறு பிரதமர் ஹரிணி வலியுறுத்தல்.!
‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையின் பின்னர் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் மீட்பு, புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக அமைக்கப்பட்ட ‘இலங்கையை மீளக் கட்டியெழுப்புதல்’ ஜனாதிபதி செயலணி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.
இக்கூட்டத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவான மற்றும் நிலையான நிவாரணங்களை வழங்குதல், அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை வழமை நிலைக்குக் கொண்டு வருதல் மற்றும் நீண்டகால அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்பார்வையிடுதல் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
மேலும், இதுவரை கிடைத்துள்ள வெளிநாட்டு உதவிகள் மற்றும் செயலணியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது. ‘டித்வா’ சூறாவளியால் சேதமடைந்த வீடுகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளின் முழுமையான மதிப்பீட்டு அறிக்கை இம்மாத இறுதிக்குள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
தற்போது இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு விரைவில் நிரந்தர தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.இக்கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் ‘சூம்’ தொழில்நுட்பம் ஊடாக இணைந்து தங்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை முன்வைத்தனர்.
