மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் போதைப்பொருள் தடுப்பு வார விழிப்புணர்வு நிகழ்வு.!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் “முழு நாடும் ஒன்றாக” என்ற தேசிய செயற்றிட்டத்தின் கீழ் விஷபோதைப்பொருள் தடுப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு இன்று (06) நடைபெற்றது. இந்நிகழ்வு வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் திருமதி அனுசிக்கா அபேசிங்க தலைமையில் பிரதான கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அதிபர் அனுரகுமார திசாநாயக்காவின் வழிகாட்டுதலின் கீழ் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கும் தேசிய செயற்திட்டம், தேசிய செயற்பாட்டு சபையின் ஒருங்கிணைப்பில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இதனை முன்னிட்டு, மாவட்ட போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர் பி. தினேஸ் அவர்களால் விஷபோதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கு விளக்கக் கருத்தரங்கு வழங்கப்பட்டது.
மேலும் மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும்விநியோகத்தை கட்டுப்படுத்துதல், அதற்கு அடிமையானவர்களை பழக்கத்திலிருந்து விடுவித்தல் மற்றும் புனர்வாழ்வு வழங்குதல் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.நிகழ்வின் போது வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் மற்றும் ஒட்டுப் பலகைகள் வழங்கப்பட்டதுடன், அவை வைத்தியசாலை வளாகத்திலும் காட்சிப்படுத்தப்பட்டன.
மேலும் போதைப்பொருள் தொடர்பான தகவல்களை 1818 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு வழங்கி, போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டது.இந்நிகழ்வில் வைத்தியர் லிவிதன், விசேட தர தாதியர் உத்தியோகத்தர்கள், தாதியர் சகோதரிகள், தாதியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
