திருகோணமலையில் ஈரான் போர்க்கப்பல்: அரசுக்கு முரளிதரன் கடும் குற்றச்சாட்டு.!
வடமாகாண காணிக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இ. முரளிதரன், ஈரானின் போர்க்கப்பலை திருகோணமலை துறைமுகத்தில் நிறுத்தியமை தமிழ் மக்களையும் அமெரிக்க அரசாங்கத்தையும் பகைவர்களாக மாற்றும் நோக்கில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட திட்டமிட்ட சூழ்ச்சி என குற்றம்சாட்டியுள்ளார்.இன்று கருத்து வெளியிடும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.மத்திய கிழக்கில் போர் பதற்றம் தொடர்ந்துவரும் நிலையில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையில் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் இருந்த ஈரானிய போர்க்கப்பல் ஒன்றை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்கி அழித்ததாக கூறப்படுகிறது.அந்தச் சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
ஈரானின் மற்றொரு போர்க்கப்பல் இலங்கையில் நங்கூரமிட அனுமதி கோரியிருந்தபோதிலும், அரசாங்கம் ஆரம்பத்தில் அமைதியாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார். பின்னர் நாடாளுமன்றத்தில் எழுந்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து அந்தக் கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஈரானிய கப்பலில் இருந்த பணியாளர்கள் கொழும்பில் கரையிறக்கப்பட்ட பின்னர் அந்தப் போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், இது தமிழர்களையும் அமெரிக்காவையும் மோதலுக்குள் இழுக்கும் நடவடிக்கையாகத் தோன்றுகிறது என்றும் அவர் கூறினார்.
காலி, ஹம்பாந்தோட்டை மற்றும்கொழும்பு துறைமுகங்கள் உள்ள நிலையில் அவற்றைத் தவிர்த்து திருகோணமலை துறைமுகத்தில் போர்க்கப்பலை நிறுத்தியிருப்பது தமிழர்களுக்கு எதிரான மறைமுக அரசியல் நடவடிக்கையாகும் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
அனுர அரசாங்கம் மிகத் திட்டமிட்ட முறையில் செயல்பட்டு அமெரிக்காவையும் தமிழ் மக்களையும் மோதலுக்குள் தள்ளும் சூழலை உருவாக்க முயல்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் தமிழர் தாயகமாக கருதப்படுகின்ற நிலையில், திருகோணமலை துறைமுகத்திற்கு இந்தக் கப்பலை கொண்டு வருவதன் மூலம் அமெரிக்கா அதனைத் தாக்கினாலும் அல்லது அதற்கு எதிராக நடவடிக்கை எடுத்தாலும் அதன் விளைவுகள் தமிழ் மக்களையே பாதிக்கும் சூழல் உருவாகும் என அவர் கூறினார்.
மேலும், 200க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொழும்பில் இறக்கிய பின்னரும் ஏன் அந்தக் கப்பலைதமிழர் வாழும் திருகோணமலை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.